அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்

Published Date: May 24, 2025

CATEGORY: CONSTITUENCY

தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 137 பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு:

தமிழக தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் கடந்த ஆண்டு நடந்த உமாஜின் - 2024 மாநாட்டில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி - ஹப்) உருவாக்கிய 'ஜிக்சா' என்னும் தலைப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்வி நிறுவனங்கள் தொழில்துறை, தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழகத்தில் ஆழ்தொழில்நுட்பங்களுக்கான (டீப்டெக்) வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இந்த தளம் முன்னெடுக்கப்பட்டது.

ஜிக்சா தளத்தில் இதுவரை 137 கல்வி நிறுவனங்கள், 303 புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் 6,065 ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த தளம் மூலம் 43 தொழில்துறை நிறுவனங்கள், 69 முதலீட்டாளர்கள், 42 தொழில்துறை வழிகாட்டிகள் புத்தாக்க நிறுவனங்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். 

இதற்கிடையே, 137 பொறியியல் கல்லூரிகளுடன் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் மூலம் ஜிக்சாவின் பயன்பாடு சென்னையை தாண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 2, 3-ம் நிலை நகரங்களுக்கு விரிவடைய  செய்யப்பட்டுள்ளது.  

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Media: Hindu Tamil